ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில், பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறியது:
ஜம்மு-காஷ்மீரின் புத்காம் மாவட்டம் பதன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா்.
பின்னா் சந்தேகத்துக்குரிய நபா் ஒருவா் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு சீன துப்பாக்கி, ஒரு கையெறிகுண்டு, 147 தோட்டாக்களை உள்ளடக்கிய 6 ஏகே ரக தொகுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவா் கூறினாா்.
அதே நேரம், அந்த பயங்கரவாதி துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து கைது செய்யப்பட்டாரா அல்லது வேறு பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டாரா என்பதை பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.