புதுவையில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது தினந்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெளிமாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக புதுவைக்கு வருபவோரால்தான் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புதுவையில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதில் 228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 165 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த கரோனா பாதிப்புக்குள்ளான 62 வயது முதியவர் ஜிப்மரில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.