கொல்கத்தா: கொல்கத்தாவில் குடும்ப வன்முறையால் கணவனை மனைவி சரமாரியாகத் தாக்கும் விடியோ ஒன்று, ஞாயிறன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதுதொடர்பாக பிதாநகர் (வடக்கு) காவல்நிலைய அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
கொல்கத்தாவின் கிழக்குப் பகுதியில் வசதியானவர்கள் வாழும் சால்ட் லேக் குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பிதாநகர் (வடக்கு) காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் சால்ட் லேக் பி.டி ப்ளாக்கில், தீப் மஜும்தார் (33) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தேப்ஜனி சன்யால். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. தம்பதியினரிடையே பெரிய பிரச்னைகள் இல்லை.
ஆனால் கடந்த நான்கு வருடங்களாக தான் குடும்ப வன்முறையினை அனுபவித்து வருவதாக மஜும்தார் தெரிவிக்கிறார். அதற்கு சாட்சியாக மஜூம்தாரை அவரது மனைவி தேப்ஜனி சரமாரியாகத் தாக்கும் விடியோ ஒன்று ஞாயிறன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் மஜூம்தாரை கண்மண் தெரியாமல் தாக்கி, தேப்ஜனி அறைகிறார். அத்துடன் கைகளை முறுக்கி வெறியுடன் தாக்குவதும் நடக்கிறது. இவை எல்லாம் மஜும்தாரின் லேப்டாப் காமெரா வழியாக பதிவாகியுள்ளது. அத்துடன் தனது பெற்றோரையும் தேப்ஜனி மரியாதைக்குறைவாக நடத்துவதாக மஜும்தார் தெரிவிக்கிறார். இதுதொடர்பாக அவர் புகாரும் அளித்துள்ளார். அதனைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.