தில்லியில் ஜூன் இறுதியில் 30 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருக்கும்: அமித் ஷா
தில்லியில் ஜூன் 30-ஆம் தேதி 30 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஜூன் 30-ஆம் தேதி 30 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அமித் ஷா இதுபற்றி பேசியதாவது:
"ஜூன் 30-இல் 30,000 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும். ரயில் பெட்டிகளில் 8 ஆயிரம் படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 8,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுக்கென பிரத்யேக மருத்துவமனையை டிஆர்டிஓ உருவாக்கி வருகிறது. அங்கு வென்டிலேட்டர்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் 250 படுக்கை வசதிகள் உள்ளன. மழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு 10,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தில்லி அரசால் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்ட 9,937 படுக்கைகள் முழுமையாக நிரப்பப்படவில்லை.
அவர்கள் எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என்றல்ல, நிலைமை மோசமானால் அதற்கென்று முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துள்ளோம்.
சிறப்பான முறை, கரோனாவுக்கு சிகிச்சையளிக்க கூடுதல் கட்டணம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளின் கருத்தை மருத்துவ நிபுணர் குழு பரிசீலிக்கும் என்று எனது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக தனி படுக்கை வசதிக்கு ரூ. 24,000 முதல் 25,000 வரை கட்டணம் இருந்தது. தற்போது அது ரூ. 8,000 முதல் ரூ. 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் இல்லாமல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டணம் ரூ. 34,000 முதல் ரூ. 43,000 ஆக இருந்தது. தற்போது அது ரூ. 13,000 முதல் ரூ. 15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 44,000 முதல் ரூ. 54,000 கட்டணமாக இருந்தது. தற்போது அது ரூ. 15,000 முதல் 18,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவை கரோனா பரிசோதனை மற்றும் மருந்துகளையும் உள்ளடக்கும். ஒருவேளை நீரிழிவு நோயாளியாக இருந்து, கூடுதல் சிகிச்சையும் உள்ளடக்கும். இது ஒரு தொகுப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது."