ஒலிம்பிக்கில் தங்கமே அடுத்த இலக்கு
சொந்த மண்ணில் சாதனைகளுடன் கோப்பையை வென்றது பெருமிதமாக உள்ளது. இப்போது எனக்கும், வீரர்களுக்கும் முக்கிய தேவைகள் நல்ல உணவு, உறக்கம், ஓய்வு ஆகியவை.
'சொந்த மண்ணில் சாதனைகளுடன் கோப்பையை வென்றது பெருமிதமாக உள்ளது. இப்போது எனக்கும், வீரர்களுக்கும் முக்கிய தேவைகள் நல்ல உணவு, உறக்கம், ஓய்வு ஆகியவை.
அடுத்த டி20 உலகக் கோப்பையையும் வெல்வோம். ஆனால், அதையும் மீறி முக்கிய இலக்கு லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ள 2028 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதாகும். ஆசியப் போட்டியில் கிரிக்கெட்டில் ஏற்கெனவே தங்கம் வென்றுள்ளோம். உலகக் கோப்பையைப் போல் ஒலிம்பிக் தங்கம் வெல்வது மிகவும் கெளரவமானது. 1900-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் இடம் பெறுகிறது' என்கிறார் கேப்டன் சூரியகுமார் யாதவ்.
ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து இரு முறை கைப்பற்றியது, மூன்று முறை கைப்பற்றியது, போட்டியை நடத்திய நாடே பட்டம் வென்றது ஆகிய முப்பெரும் சாதனைகளை நிகழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் தங்கம் ஆகும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் டி20, ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் கோப்பை எனப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய அணி இதில் டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டத்தை வசப்படுத்தியுள்ளது. ஆனால், இன்னும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தை வெல்லவில்லை. குறுகிய ஓவர்கள் ஆட்டத்தில் இந்திய அணி தற்போது சிறந்து விளங்குகிறது. டெஸ்ட் ஆட்டங்களை காட்டிலும் ஒருநாள் ஆட்டங்களுக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. தற்போது டி20 ஆட்டங்களே பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.
2007-இல் முதன்முறையாக டி20 உலகக் கோப்பை போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்றிருந்தது. அதன்பின்னர் 2024-இல்தான் மீண்டும் இரண்டாவது முறையாக பட்டம் வென்றது இந்தியா. 2026 டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா-இலங்கை இணைந்து நடத்தின. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற இப்போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இருந்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முப்பெரும் சாதனை: அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்தையும், நியூஸிலாந்து-தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்றன. இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பை, போட்டியை நடத்திய நாடே சாம்பியன், மூன்றாவது முறையாக சாம்பியன் என்ற சாதனைகளை நிகழ்த்தியது இந்தியா.
நால்வர் அணி: இந்திய அணி மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதில் தொடக்க பேட்டர்கள் சஞ்சு சாம்ஸன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், பெளலர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். தொடக்க, சூப்பர் 8 சுற்றுகளில் வெவ்வேறு வீரர்கள் வெற்றிக்கு வித்திட்டாலும், முக்கியமான இறுதி ஆட்டத்தில் இந்த நால்வர் அணி தான் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தனர்.
இளம்வீரர் அபிஷேக் சர்மா தொடக்கத்தில் 3 முறை டக் அவுட்டானார். இதனால் அணியில் இடம் பெறுவதே கேள்விக்குறியாகிவிட்டது. எனினும், கேப்டன் சூரியகுமார் அவர் மீது நம்பிக்கை வைத்து இறுதி ஆட்டத்திலும் அவரை ஆட வைத்தார். அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. அபிஷேக்கின் அதிரடி, சஞ்சு சாம்ஸனின் நிலையான சிறப்பான ஆட்டம், இஷான் கிஷன் அரைசதம் ஆகியவை பேட்டிங்கில் பலம் சேர்த்தன. பெளலிங்கில் அதிரடி பெளலர் பும்ரா, அக்ஸர் படேல் முக்கிய பங்கு வகித்தனர்.
டி20 ஆட்டத்தில் ஜாம்பவான் என்ற அந்தஸ்துடன் உள்ள இந்தியா அடுத்த முக்கியமான இலக்கை குறி வைத்துள்ளது.