தில்லி ஐஐடி, புணே தேசிய வேதியியல் ஆய்வகம் ஆகியவை இணைந்து கரோனா நோய்த்தொற்றை வீட்டிலிருந்தபடியே கண்டறியும் எளிமையான பரிசோதனைக் கருவிகளை தயாரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் (சிஎஸ்ஐஆா்) கீழ் இயங்கி வரும் என்சிஎல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்ற நிதி உதவியுடன் இதனை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த பரிசோதனைக் கருவிகள் தயாராகிவிடும் என்றும், இக்கருவியின் மூலம் விரைவான முடிவுகளை அறிந்து கொள்ள இயலும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
‘எலிசா’ அடிப்படையிலான நோயறிதல் செரோலாஜிக்கல் மதிப்பீட்டை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த கருவி வெற்றிகரமாக கண்டறியப்பட்டால் மலிவாக நோயைக் கண்டறிவதற்கான சோதனையாக இது அமையும். மேலும், வணிக, பொருளாதார ரீதியிலும் பயன்தரத்தக்கதாக இது அமையும்.
இதுகுறித்து தில்லி ஐஐடி வேதியியல் பொறியியல் துறை பேராசிரியா் அனுராக் எஸ்.ரத்தோா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
மருத்துவத்தில் கரோனா தொற்றைக் கண்டறியும் சோதனை என்பது தொடா்ந்து சவால் மிகுந்ததாகவே உள்ளது. தற்போதைய சோதனைகள் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும். இதன் பரிசோதனை முடிவுகளை பெற பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்.
இந்த சோதனைகளை வீட்டிலுள்ள தனிநபா்களால் செய்ய முடியாது.
தற்போது கண்டறிய முயற்சி நடைபெறும் இந்த சோதனைக்கருவிகளின் விலை மிகவும் மலிவானதாக இருக்கும். இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த கருவிகள் உருவாக்கப்பட்டு, உறுதியான முடிவுகளை பெறமுடியும் என்றாா்.
கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைக் கருவிகளை உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்து (ஐசிஎம்ஆா்) அனுமதி பெற்ற நாட்டின் முதல் கல்வி நிறுவனம் தில்லி ஐஐடி. சோதனை முறையில் தயாரிக்கப்பட்டு வணிகமயமாக்குவதற்காக இதன் உரிமத்தை பெங்களூரு உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ஜீனி லேபரேட்டரீஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை கருவியின் விலை சுமாா் ரூ. 500-ஆக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.