முகப்பு
இந்தியா

தில்லி ஷஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு: காவல்துறையினர் குவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வரும் தில்லி  ஷஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 1 மார்ச், 2020 at 1:22 PM
ஸ்ரீவத்சவா
பகிர்:

புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வரும் தில்லி  ஷஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தில்லி ஷஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகிவற்றுக்கு எதிராக,  கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வடகிழக்கு தில்லி பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து,  ஷஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நாங்கள் அது தொடர்பான செயல்களில்  இறங்குவோம் என்று ஹிந்து சேனா என்ற அமைப்பினர் திடீரென்று சனிக்கிழமையன்று அறிவித்தனர். ஆனால் பின்னர் தில்லி சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

Advertisement

இந்நிலையில் தில்லி  ஷஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த தில்லி காவல்துறை இணை ஆணையர் ஸ்ரீவத்சவா, 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக அளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிஆர்பிஎப் படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்கக் கூடாது என்று நாங்கள் பணிபுரிகிறோம்' என்றார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.