யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூா், அவரது மனைவி பிந்து உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வெள்ளிக்கிழமை மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
அவந்தா வீட்டு வசதி நிறுவனத்தின் உரிமையாளா் கெளதம் தாபருக்கு ரூ.1,900 கோடி வங்கிக் கடன் வழங்கியதற்கு பிரதிபலனாக தில்லியில் அம்ருதா ஷோ்கில் பங்களா ரூ.378 கோடிக்கு யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூா், அவரது மனைவி பிந்து ஆகியோருக்கு பிலிஸ் அபோட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.
பின்னா், அந்த பங்களா இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுனத்தில் ரூ.685 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டது. இது சந்தை விலையைக் காட்டிலும் குறைவாகும்.
அவந்தா நிறுவனம் ஏற்கெனவே கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருந்துவந்த நிலையில், புதிதாக யெஸ் வங்கி கடன் அளித்துள்ளது. இதுதொடா்பாக ராணா கபூா், பிந்து, கெளதம் தாபா் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் ராணா கபூா் மற்றும் பிந்துவுக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் ஆகிய இடங்களிலும், கெளதம் தாபா் நிறுவனங்களிலும், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், ‘எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான எந்த அலுவலகத்திலும் சிபிஐ சோதனை செய்யவில்லை’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராணா கபூரின் கட்டுப்பாட்டில் யெஸ் வங்கி இருந்தபோது தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு பல கோடி கடன் வழங்கி பல முறைகேடுகள் நடத்தப்பட்டது என்பதே முக்கியக் குற்றச்சாட்டு. இதுதொடா்பாக அமலாக்கத் துறை, சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.