சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்: கரோனா பாதித்து உயிரிழந்தவரின் மகன் குற்றச்சாட்டு
எனது தந்தையின் மரணத்துக்கு மருத்துவர்களின் பயமே காரணம் என்று கர்நாடகத்தில் கரோனா பாதித்து உயிரிழந்த 76 வயது முதியவரின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கலபுர்கி: எனது தந்தையின் மரணத்துக்கு மருத்துவர்களின் பயமே காரணம் என்று கர்நாடகத்தில் கரோனா பாதித்து உயிரிழந்த 76 வயது முதியவரின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கரோனா பாதித்த எனது தந்தைக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரது மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.
அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதும், தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார்கள். பிறகு 8ம் தேதி வேறு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கும் அவர்கள் ஹைதராபாத்துக்குக் கொண்டு செல்லுமாறு கூறிவிட்டனர்.
Advertisement
எங்களுக்கு ஹைதராபாத் செல்ல விருப்பமே இல்லை. ஆனால் எங்களை ஹைதராபாத் கொண்டு செல்ல வலியுறுத்தினர். அங்கு சென்றும், அவர் துபையில் இருந்து வந்தவர் என்று தெரிந்ததால், மருத்துவமனைகளில் அனுமதிக்கவில்லை.
கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை குறித்து அறிந்ததும், இரண்டு மணி நேரத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர்.
பிறகு குல்பர்கா மருத்துவ அறிவியல் மையத்தில் அனுமதித்தோம். அங்கு மருத்துவர்கள் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார்.
9ம் தேதி மாலை 4 மணி முதல் 10ம் தேதி காலை 2 மணி வரை அவர் ஆம்புலன்ஸிலேயே அலைக்கழிக்கப்பட்டாரே தவிர, அவருக்கு எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கரோனா பாதித்து உயிரிழந்த முதியவரின் மகன் கூறுகிறார்.
இது குறிது கலபுர்கி துணை ஆணையரிடம் கேட்டபோது, முதியவரின் குடும்பத்தினர், மருத்துவ ஆலோசனைக் கேட்காமல், அவரை ஹைதராபாத் கொண்டுவந்துவிட்டனர். வேறு வழியில்லாமல் அவரை குல்பர்கா மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.