மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிப்பதற்கான பரிந்துரையை ஏற்றுக்கொண்டது குறித்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு விளக்குகிறேன் என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பணியாற்றிய ரஞ்சன் கோகோய் கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஏற்கெனவே நியமன உறுப்பினராக இருந்த மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ் துளசி பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகோயை குடியரசுத் தலைவர் நியமித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக குவாஹட்டியில் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் கோகோய்,
"நான் அநேகமாக நாளை தில்லி செல்வேன். முதலில் நான் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறேன். அதன்பிறகு, இதை ஏன் ஏற்றுக்கொண்டேன், எதற்காக மாநிலங்களவைக்குச் செல்கிறேன் என்பது குறித்து ஊடகங்களிடம் விரிவாக பேசுகிறேன்" என்றார்.
முன்னதாக, ரஞ்சன் கோகோயை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் விமரிசனங்கள் எழுந்தன. பாபர் மசூதி நில விவகாரம், ரஃபேல், சபரிமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் இவரது தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்புகள் முக்கியத்துவம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.