அரசின் விதிமுறைகளை மீறி தனிமைப்படுத்தப்பட்ட என்.ஆர்.ஐ. இருவர் மீது ஆந்திர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 733 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திரத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அரசு அறிவுறுத்தியும் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பொதுவெளியில் நடமாடியுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவர் மீதும் ஆந்திர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இலூரி ராஜசேகர் ரெட்டி மற்றும் எல். விஸ்வநாத் ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் கடந்த மார்ச் 14 அன்று அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.