டேஹ்ராடூன்: நல்ல உணவு கொடுங்கள் என்று தனிமைப் படுத்தப்பட்டுள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர்கள் உட்பட 15 மருத்துவப் பணியாளர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மிக மோசமான உணவை வாங்குவது என்பது மாநில அரசின் மனிதநேயமற்ற செயலாகும். ஏற்கனவே இது பற்றி நாங்கள் குரல் எழுப்பியிருந்தோம். நல்ல உணவு தருவதாக உறுதி மட்டுமே அளிக்கப்பட்டது என்கிறார்கள் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி தனிமையில் வைக்கப்பட்டிருப்பவர்கள். இவர்கள் தங்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
வெறும் பாலிதீன் பைககளில் உணவு வழங்கப்படுகிறது. சாப்பிட தட்டுக் கூட கொடுப்பதில்லை. குறைந்தபட்ச சுகாதாரம் கூட பேணப்படுவதில்லை. எங்களுக்காக வானில் இருந்து பூக்களை தூவுவது கூட தேவையில்லை, நல்ல உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் போதும் என்கிறார்கள் அவர்கள்.
ஒரே படுக்கையில் தான் அமர்ந்திருக்கிறோம், சாப்பிடுகிறோம், தூங்குகிறோம். இங்கு வந்து 48 மணி நேரமாகிறது. இதுவரை அறையை ஒரு முறை கூட சுத்தப்படுத்தவில்லை, குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன என்கிறார்கள் வருத்தத்தோடு.
நாங்கள் ஏன் இங்கு இருக்க வேண்டும்? எங்களைப் பற்றி நினைக்காமல் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தோம். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராடும் எங்களுக்கு அத்தியாவசிய வசதிகளைக் கூட செய்து கொடுக்க மறுப்பது குற்றமாகாதா? என்கிறார்கள் வேதனையோடு.
இது குறித்து விளக்கம் அளித்த மருத்துவர் மதுர் உனியால், இந்த பிரச்னை தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. நேரடியாக தலையிட்டு, அத்தியாவசிய தேவைகள் செய்து கொடுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.