புவனேஸ்வர்: ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தின் குஹுடி அருகே பேருந்துடன் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்து பாங்கி செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த 40 தொழிலாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்துடன், காய்கனிகளை ஏற்றிவந்த லாரி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் உதவி ஓட்டுநர் கே.ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 10 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கேந்திரபாரா, பூரி மற்றும் கட்டாக் மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து பேருந்தை வாடகைக்கு எடுத்து வந்திருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களில் ஒடியா குடியேறியவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் சம்பந்தப்பட்ட நான்காவது விபத்து இதுவாகும்.
முன்னதாக மே 2ம் தேதி, சூரத்திலிருந்து குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து காந்தமால்-கஞ்சம் எல்லையில் உள்ள கலிங்க காட் என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.
மே 3 ம் தேதி, சூரத்திலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கலிங்க காட்டில் விபத்தை சந்தித்ததில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர்.