காஷ்மீர் தாக்குதலில் சிறுவன் பலி: உடலை அடக்கம் செய்த பாதுகாப்புப் படை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மூவர் உயிரிழந்தனர். இதே தாக்குதலில் உயிரிழந்த சிறுவனின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாமல் பாதுகாப்புப் படையினரே நல்லடக்கம் செய்துள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தின் கிரால்குண்ட் பகுதியில் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே தாக்குதலில் 14 வயதான மொஹம்மது ஹசிம் பட் பலியானார்.
இந்த நிலையில், சிறுவனின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாமல், அவரது சொந்த ஊரான வானகத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓரிடத்தில் குடும்பத்தினரின் முன்னிலையில் பாதுகாப்புப் படையினரே நல்லடக்கம் செய்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் கூறுகையில், சிறுவனின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தால், ஊரடங்கு உத்தரவுகளை மீறி நல்லடக்கம் நடைபெறும் என்பதால், பாதுகாப்புப் படையினரே அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில வாரங்களாக, இதுபோன்ற தாக்குதலில் உயிரிழக்கும் பயங்கரவாதிகளின் உடல்கள் மற்றும் பொதுமக்களின் உடல்களும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாமல், பாதுகாப்புப் படையினரே நல்லடக்கம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.