மார்க்சிஸ்டுக்கு திருவொற்றியூர் தொகுதி! அதிருப்தியில் திமுகவினர்!
மார்க்சிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியலில் திருவொற்றியூர் இல்லை என்ற நிலையில், இத்தொகுதியை திமுக தலைமை ஒதுக்கியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை என்று அதிருப்தி
திமுக கூட்டணியில் திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1967 முதல் இத்தொகுதியில் திமுக 7 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான தேர்தல்களில் இத்தொகுதியில் திமுக நேரடியாகப் போட்டியிட்டுள்ளது. அதன்படி, இந்த முறை திமுகதான் நேரடியாகக் களம் இறங்கும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் இருந்தனர்.
தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் போட்டியிட வாய்ப்பு கேட்டு திமுக தலைமையிடம் விருப்ப மனு அளித்திருந்தனர். மேலும், வேட்பாளர் நேர்காணலிலும் பங்கேற்றனர். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரசார வாகனம்கூட தயார் செய்திருந்தனர்.
ஆனால், திருவொற்றியூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோலதான் கடந்த 2001 தேர்தலின்போது, கடைசி நேரத்தில் திமுக கூட்டணி வேட்பாளராக குமரி அனந்தன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
அதோடு, மீனவர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்பாளர் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த நடைமுறையும் இந்தத் தேர்தலில் பின்பற்றப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியலில் திருவொற்றியூர் இல்லை என்ற நிலையில், இத்தொகுதியை திமுக தலைமை ஒதுக்கியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை என்று அக்கட்சியினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எப்படியிருந்தாலும் கட்சித் தலைமையின் முடிவையேற்று பணியாற்றுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.