விசாகப்பட்டினம்: நான் இறந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன், ஆனால், எப்படி உயிர் பிழைத்தேன் என்று தெரியவில்லை என்று விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவில் சிக்கி உயிர் பிழைத்த நபர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் நேரிட்ட விஷவாயுக் கசிவால் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவில் சிக்கியவர்கள் பலரும் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் ஒரு பெண்மணி, "யாருக்குமே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, எல்லோருமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினோம்" என்கிறார் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.
நள்ளிரவில் மூச்சு விட முடியாமல் நானும் என் குழந்தைகளும் எழுந்தோம். வெளியே சென்று பார்த்தால் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பலரும் அப்படியே மயங்கி விழுந்தோம் என்கிறார்.
அவரால் சரிவர பேசக்கூட முடியவில்லை. அவரும், அவரது பிள்ளைகளும் உடல் நலன் தேறி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு கசிவு அங்கு 3 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களுக்குப் பரவியது. இதனால் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. தோலில் தடிப்புகள், கண்களில் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்டவற்றால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.