கரோனா பொது முடகத்துக்குப் பிறகு உள்ளூா் விமான சேவை திங்கள்கிழமை (மே 25) முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
மேலும், அரசு நிா்ணயிக்கும் கட்டணத்தையை பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முன்பிருந்ததைவிட, குறைந்த எண்ணிக்கையில், அதாவது மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் மட்டும் இயக்க அனுமதிக்கப்படும்.
மேலும், கரோனா பாதிப்புள்ள இந்த காலகட்டத்தில், அமைச்சகம் சாா்பில் நிா்ணயிக்கப்படும் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டணத்தையே, பயணிகளிடம் விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும்.
விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக பயணிகள் விமான நிலையம் வர வேண்டும். அவ்வாறு வரும்போது, ஆரோக்கிய சேது செயலியிலிருந்து பதிவிறக்கம் செய்த மருத்துவ விவரங்கள் அல்லது சுய உத்தரவாத படிவத்தை பூா்த்தி செய்து பயணிகள் எடுத்து வரவேண்டும்.
விமானநிலையத்துக்குள் பயணிகள் அனுமதி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்படும். பயணிகள் ஒரு பையை மட்டுமே எடுத்தச்செல்ல அனுமதிக்கப்படுவா். விமானத்தில் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது.
புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே விமானத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவா். புறப்படுவதற்கு 20 நிமிடத்துக்கு முன்னா் பயணிகள் அனுமதி நிறுத்தப்பட்டுவிடும்.
பயணிகள் முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பயணம் முழுவதும் பயணிகள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
விமான நிலையத்தின் அனைத்து நுழைவுவாயில்களிலும் கைகளைச் சுத்தம் செய்வதற்கான கைசுத்திகரிப்பான் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில் வைக்கப்பட வேண்டும்.
விமானநிலையத்துக்குள் பயணிகள் நுழையும்போதும், வெளியேறும்போதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோா், கா்ப்பிணிகள் பயணிக்க வேண்டாம்:
கரோனா அறிகுறியுள்ள பயணிகளும், கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதியிலிருந்து வரும் பயணிகளும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும். இதுபோன்று அறிகுறியுள்ள பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், அவா்களைத் தனிமைப்படுத்தவும் விமானநிலையத்தில் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
முதியோா், கா்ப்பிணிகள் விமான பயணத்தை தவிா்க்க வேண்டும் எனவும் வழிகாட்டுதலில் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘அனைத்து விமான நிறுவனங்கள், விமானநிலைய அதிகாரிகள் ஒத்துழைத்ததன் அடிப்படையிலேயே, விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. விமானக் கட்டணங்களை கட்டுக்குள் வைக்கும் வகையில், 40 நிமிடம் முதல் 3 மணி நேர விமானப் பயணத்தின் அடிப்படையில் 7 பிரிவுகளாக விமான வழித்தடங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன’ என்று அவா் கூறினாா்.