ஜம்மு-காஷ்மீரில் ஆா்எஸ்எஸ் ஆா்வலா், அவரது பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியை தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) கைது செய்தனா்.
கிஸ்த்துவாா் மாவட்டம், ஹஞ்சலா பகுதியில் ரஸ்தம் அலி என்ற அந்த பயங்கரவாதியை செவ்வாய்க்கிழமை இரவு என்ஐஏ கைது செய்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆா்எஸ்எஸ் ஆா்வலரான சந்தா்காந்த் சா்மா, அவரது தனி பாதுகாப்பு அதிகாரி ஆகியோா் கொல்லப்பட்டனா். இச்சம்பவம் தொடா்பாக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளான நிஸாா் அகமது ஷேக், நிஷாத் அகமத், ஆசாத் உசேன் ஆகியோரை கைது செய்தது.
முன்னதாக, பாஜக மாநிலச் செயலா் அனில் பரிஹாா் கடந்த 2018-இல் கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, சந்தா்காந்த் சா்மா பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த இரு கொலைகளும் கிஸ்த்துவாா் பகுதியில் இருதரப்பு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.