பசிக் கொடுமையால் சாலையில் இறந்துகிடந்த ஒரு நாயின் இறைச்சியை ஒருவர் தின்றதை அவ்வழியாகச் சென்ற ஓர் இளைஞர் செல்லிடப்பேசியில் எடுத்து சுட்டுரையில் வெளியிட, இன்று வலைத்தளங்களில் வெகு வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது அந்த ஒளிப்பதிவுக் காட்சி.
ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த பிரதுமான் சிங் நருகா என்ற இளைஞர், கண்டதுதான் இந்தக் காட்சி. அனைவரின் நெஞ்சையும் உலுக்கும் இந்தக் காட்சியைப் பலரையும் போல பார்த்து செல்லிடப்பேசியில் விடியோ எடுத்துவிட்டுக் கடந்துசென்றுவிடவில்லை அவர்.
दिल्ली-जयपुर नेशनल हाइवे पर एक मजदूर भूख के कारण मरे हुए कुत्ते को खाने को मजबूर हो गया। #Pradhuman_Singh_Naruka जी ने इसको खाना, पानी व पैसे दिए।
सरकारें बिल्कुल फेल हो चुकी हैं कृपया यह तस्वीर सरकारों तक पहुचाएं@SabhajeetAAP @SanjayAzadSln @amrishsingh6@ABPNews @ndtv @Zee pic.twitter.com/7R0paw2u4o
நருகா சாலையில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையின் நடுவில் ஏதோ ஒன்று விநோதமாக நடக்கிறது என்பதை உணர்கிறார். தனது செல்லிடப்பேசியை எடுத்து அதை விடியோ எடுக்கிறார். அங்கு ஓர் இளைஞன், கொடூர பசியால் வாகனத்தில் அடிபட்டுச் செத்துக் கிடந்த நாயின் இறைச்சியை எடுத்துத் தின்றுகொண்டிருக்கிறார். ஏராளமான வாகனங்கள், அவற்றின் ஓட்டுநர்களின், உரிமையாளர்களின் வெற்றுப் பார்வையோடு கடந்துசென்று கொண்டிருக்கின்றன.
உடனடியாக அவருக்கு அருகே வாகனத்தை நிறுத்திய நருகா, இளைஞனிடம் சென்று "சாப்பிட உணவு இல்லையா, எதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய், நீ இறந்துவிடுவாய்" என்று கத்துகிறார். மேலும், அந்த நபரிடம் "சாலையோரம் வருமாறு" அறிவுறுத்துகிறார்.
உடனே அந்த நபரும் சாலையோரம் வருகிறார். அவருக்கு நருகா, தான் கொண்டு வந்திருந்த உணவை அளிக்கிறார். குடிக்கத் தண்ணீரும் கொடுக்கிறார். எந்த மறுப்போ பதிலோ இல்லாமல் உடனடியாக அந்த நபர் உணவை சாப்பிடத் தொடங்குகிறார்.
அனைத்தையும் விடியோவில் பதிவுசெய்திருக்கும் நருகா, தயவுகூர்ந்து சாலையில் இவ்வாறு யாரையாவது பார்த்தால் உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கையையும் விடியோ மூலம் முன்வைக்கிறார்.
இந்த விடியோ சமூக வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஏராளமான அரசு ஊழியர்களையும், தொலைக்காட்சி நிறுவனங்களையும் டேக் செய்திருக்கிறார்கள்.
இந்த விடியோவுக்கு பல்வேறு தரப்பு மக்களும் தங்களது கருத்துகளையும், வேதனையையும் பதிவு செய்து வருகிறார்கள்.
ஒளிப்பதிவிலுள்ள காட்சியைப் பார்க்க, அனேகமாக அந்த இளைஞர் மனநிலை பிறழ்ந்தவரைப் போலத் தோன்றுகிறது. பசிக் கொடுமை காரணமாக, எதையும் வேறுபடுத்திக் காண முடியாத நிலையில், கிடைத்ததைத் தின்னும் நிலையில் இறந்துகிடந்த நாய் இறைச்சியைத் தின்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.