தில்லி: காவலர் மீது காரை ஏற்றியவர் கைது
தில்லியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தில்லியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தில்லி நகரைச் சேர்ந்த காவலர்களான ஜிதேந்தர் மற்றும் அன்கூர் ஆகியோர் குற்றச்சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே நள்ளிரவு வேளையில் சரிதா விஹார் பகுதியில் ஏ.டி.எம். வாயிலில் சொகுசுக் காரை நிறுத்தி இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு சென்று அவர்களை கலைக்க முயன்றபோது, இளைஞர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காரில் மதுபாட்டில்கள் இருப்பதையும் காவலர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து காரை நெருங்கியபோது போக்குவரத்து காலவர்களை இடித்துவிட்டு கார் புறப்பட்டது. இதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மற்றொரு காவலர் காரை பின்தொடர்ந்து சென்ற நிலையில், அவரது காலில் காரை ஏற்றிவிட்டு ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காரை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஓட்டுநரை அதிரடியாக கைது செய்தனர். சொகுசுக் கார் ஓட்டுநரின் உறவினருடையது என்றும், நண்பர்களுடனான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காரை வாங்கிவந்ததாகவும் துணை ஆணையர் மீனா தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.