பஞ்சாப்: 'ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'
பஞ்சாபில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வரிடம் அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கை
பஞ்சாபில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வரிடம் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பஞ்சாபில் விவசயிகள் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரயில்களும் செல்ல இயலாத வகையில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாபில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து வருகிறார்.
இதனிடையே இன்று (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கையும் நேரில் சந்தித்து ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மத்திய ரயில்வேத்துறை சார்பில் ரயில்களை இயக்கத் தயாராக உள்ளதாகவும், தண்டவாளங்களில் விவசயிகளின் போராட்டங்களை சமரசம் செய்து, ரயில்களுக்கும், ரயில்வே பொருள்களுக்கும், பயணிகளுக்கும் எந்தவித சேதமும், ஆபத்தும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.