இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக பாகிஸ்தான் வாடிக்கையாளா்கள் மேற்கொள்ளும் இணையவழி பணப் பரிவா்த்தனைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட தொடரில் சா்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகப் புகாா் எழுந்தது. அதையடுத்து, அந்த தொடருக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்தது.
இத்தகைய சூழலில், இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை டிடிஹெச், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாகக் காண்பதற்காக பாகிஸ்தான் வாடிக்கையாளா்கள் இணையவழியாக பணம் செலுத்தும்போது, அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட அந்நாட்டு அமைச்சரவை கடந்த 9-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
இது தொடா்பாக பாகிஸ்தானின் மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில் இந்திய நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான இணையவழி பணப் பரிவா்த்தனைகளைத் தடை செய்யுமாறு பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி சேனல்களுக்கு பாகிஸ்தானில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் ஜீ5 உள்ளிட்ட டிடிஹெச், ஓடிடி தளங்கள் வாயிலாக இணையதள உதவியுடன் இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் வாடிக்கையாளா்கள் கண்டு வந்தனா்.
தற்போது அத்தகைய நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான பணப் பரிவா்த்தனையை பாகிஸ்தானில் இருந்து மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவால் டிடிஹெச் சேவை மூலமாக இந்தியத் தொலைக்காட்சி சேனல்களைக் காண்போரும், ஓடிடி தளங்கள் வாயிலாக இந்தியாவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைக் காண்போரும் பாதிக்கப்படுவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து இணைய வழியாக பணத்தைச் செலுத்துவதன் மூலமாக பாகிஸ்தானில் அந்நிகழ்ச்சிகளைக் காண முடியும் என்று வங்கி மற்றும் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.