சர்ச்சைக்குரிய கேரள போலீஸ் அவசர சட்டத் திருத்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை அறிவித்தார்.
இதுபற்றி முதல்வர் பினராயி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து, பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு கருத்துகள் எழுந்தன. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் இதுகுறித்து கவலை வெளிப்படுத்தினர். இப்படிப்பட்ட சூழலில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது நோக்கமல்ல.
இதுபற்றி பேரவையில் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு, அனைத்துக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்."
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இந்தச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையில், "இந்தக் கடுமையான சட்டம் ஒவ்வொரு தனிநபரையும் பாதிக்கும். பேரவை இந்தச் சட்டத்தை ஒருபோதும் நிறைவேற்றாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. மக்கள் குரலை ஒடுக்கும்" என்றார்.
முன்னதாக, இணையம் வழியாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் வகையில் போலீஸ் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக மாநில அரசு தெரிவித்தது.
இந்த அவசர சட்டத் திருத்தத்தின் மூலம், சமூக ஊடகங்கள் வாயிலாக எந்தவொரு நபரையும் உள்நோக்கத்துடன் மிரட்டல், அவமதிப்பு அல்லது அவதூறு செய்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூ. 10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.