ராகுல் காந்தி அக்.19ஆம் தேதி வயநாடு பயணம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு அக்.19ஆம் தேதி செல்லவிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடுக்கு அக்.19ஆம் தேதி செல்லவிருக்கிறார்.
ராகுல் காந்தியின் வயநாடு பயணத் திட்டங்கள் குறித்த தகவல்களை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதில், அக்டோபர் 19ஆம் தேதியன்று சிறப்பு விமானம் மூலம் தில்லியில் இருந்து புறப்படும் ராகுல் காந்தி கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ராகுல் காந்தி சாலை வழியாக மலப்புரம் செல்கிறார்.
தொடர்ந்து மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர் அன்றைய இரவு கல்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் அக்டோபர் 20ஆம் தேதி வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கரோனா ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவிருக்கிறார்.
இதையடுத்து அக்டோபர் 21ஆம் தேதியன்று மனந்தவாடி மாவட்ட மருத்துவமனையை பார்வையிடுகிறார். பின்னர் கண்ணூர் விமான நிலையம் செல்லும் ராகுல் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி புறப்படுகிறார். கேரளத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் கேரளத்தில் 7,238 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.