மகாராஷ்டிரத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக இலவச செல்போன் நூலகத்தை மும்பை நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இணைய வழிக் கல்வியே தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் செல்போன் இல்லாததால் ஏழை மாணவர்களுக்கு இணைய வழிக் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒரு செல்போன் மட்டுமே இருப்பதால் அவர்களால் தொடர்ந்து இணையவழி கற்றலில் ஈடுபட இயலாத சூழல் நிலவிவருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு மும்பை மாநகராட்சி மற்றும் உருது ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மகாராஷ்டிரத்தில் இலவச செல்போன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இலவச செல்போன் நூலகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் 22 மாணவர்கள் முதற்கட்டமாக பயன்பெற்று வருவதாக செல்போன் நூலக பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.