கர்நாடகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்து அனைத்துவிதமான கல்லூரிகளும் நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கல்லூரிக்கு வர இயலாத மாணவர்கள் இணைய வழியில் தங்களது வகுப்புகளைத் தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நவம்பர் 17 முதல் பொறியியல், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டதாக துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் தெரிவித்தார்.
மேலும் “மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள ஆன்லைனில் பதிவு செய்யலாம். கல்லூரிகளுக்கு வருவதன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் இதுவரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 551 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.