பிரணாப் முகர்ஜியின் இறப்பிற்கு கரோனா முக்கிய காரணமல்ல
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு கரோனா முக்கிய காரணமல்ல என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு கரோனா முக்கிய காரணமல்ல என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மூளையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாகவே உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (திங்கள் கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே பிரணாப் முகர்ஜி குறித்து பேசிய அபிஜித் முகர்ஜி '' எனது தந்தையின் இருப்பு குடும்பத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. ஆனால் தற்போது அவரை இழந்து தவிக்கிறோம். அவரது மறைவுக்கு கரோனா தொற்று முக்கிய காரணமல்ல என்றுதான் தோன்றுகிறது. மூளையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சையே முக்கிய காரணம். அவரை மேற்குவங்கத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தோம். எனினும் கரோனா கட்டுப்பாடுகளால் முடியவில்லை.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்ததால், கடந்த 4 மாதங்களாக வெளிநபர்கள் யாரையும் அவர் சந்திக்காமல் இருந்தார்'' என்று அபிஜித் முகர்ஜி கூறினார்.