வீட்டிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்த 102 வயது மூதாட்டி: அவரது உணவு ரகசியம் இதுதானாம்
ஆந்திர மாநிலம் ஆனந்த்புர் மாவட்டத்தில், 102 வயது மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
அனந்த்புர்: ஆந்திர மாநிலம் ஆனந்த்புர் மாவட்டத்தில், 102 வயது மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
பெட்டா கம்மவரிபள்ளே அருகே புட்டபர்த்தி மண்டலத்தில் வசித்து வருபவர் முன்னநேனி சுப்பம்மா (102). இவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், ஒரு மகன் வீட்டில் இவர் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 21-ம் தேதியன்று, சுப்பம்மா உள்பட அவரது வீட்டில் இருந்த ஐந்து பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில், சுப்பம்மாவின் 62 வயது மகனுக்கு நீரிழிவு நோய் இருந்ததால் அவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சுப்பம்மா உள்பட நான்கு பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கரோனாவில் இருந்து மீண்ட 102 வயது சுப்பம்மாவைப் பற்றி கேள்விப் பட்ட அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் நாள்தோறும் அவரை வந்து பார்த்து நலம் விசாரித்து, கரோனாவில் இருந்து மீண்டதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துச் செல்கிறார்கள்.
Advertisement
சரி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு கரோனாவில் இருந்து மீண்ட 102 வயது பாட்டியின் உணவு ரகசியம் என்னவாக இருக்கும் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அவரே சொல்கிறார்..சுகாதாரத் துறையினர் அறிவுறுத்திய மருந்துகளை நேரம் தவறாமல் சரியான நேரத்தில் சாப்பிட்டேன்.
ராகி களியை உணவில் சேர்த்துக் கொண்டேன்.
அவ்வப்போது எலுமிச்சை சாறு அருந்தினேன்.
கோழிக்கறியும், இதர அசைவ உணவுகளையும் சாப்பிட்டேன் என்கிறார் உற்சாகம் சற்றும் குறையாத சுப்பம்மா.