அக்டோபர் மாத இறுதிக்குள் அரசு இல்லத்தை காலி செய்வதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா, தனது அரசு இல்லத்தை காலி செய்யப் போவதாக ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர் நிர்வாகச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஓராண்டாகவே அரசு இல்லத்தில் தான் வசித்து வருவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவதாகவும், அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு, வீட்டை காலி செய்வது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அளிக்கவில்லை, நான் தனிப்பட்ட முறையில் அரசு இல்லத்தை காலி செய்ய முடிவு செய்துள்ளேன், அதன்படி, அக்டோபர் இறுதிக்குள் வீட்டை காலி செய்வேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஒமர் அப்துல்லா அரசு இல்லத்தை காலி செய்வதற்காக ஜம்மு காஷ்மீர் அரசிடம் அவகாசம் கேட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, அக்டோபர் மாத இறுதிக்குள்தான் நான் வீட்டை காலி செய்வதாகக் கூறியுள்ளேன் என்றும் அரசிடம் அவகாசம் கேட்டதாக கூறப்படுவது பொய்யான செய்தி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளார்.