புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில் திடிரென கரோனா தொற்று பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கை வசதிகளை கரோனா சிகிச்சைக்காக ஒதுக்குமாறு ஒடிசா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
மாநில சுகாதாரத் துறை தரப்பில் மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவேனஸ்வரம், கட்டாக் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தலா 30 படுக்கை வசதிகள் இருக்கலாம், இதில் 50 சதவீத படுக்கை வசதிகளையும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் 80 சதவீத படுக்கை வசதிகளையும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்குமாறு அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை, மாநில அரசு நிர்ணயித்த கட்டண விதிகளைப் பின்பற்றிய கரோனா நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், மாநிலத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்பு 1,55,005 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் ஒடிசா அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.