கரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் 5 வரை பள்ளிகளைத் திறக்கப் போவதில்லை என புதுதில்லி கல்வித்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநிலங்களின் கரோனா பரவல் பாதிப்பு நிலைகளுக்கேற்ப செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் (9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) பள்ளிகளைத் திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு வழிகாட்டுதலை வழங்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 5ஆம் தேதி வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் செயல்படாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அதுவரை இணையவழி வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.