மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் மசோதா 2020, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தாக்கல் செய்யப்பட்டன.
இதில் மசோதா மீதான விவாதத்தை விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
3 மசோதாக்களையும் தேர்வுக் குழுவுக்கு அனுப்பக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு, மசோதாக்களின் நகலையும் எரித்தனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.
இதனிடையே கடும் அமளியால் அவை சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்திலும், சிலர் நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளனர்.
எதிர்க்கட்சியினர் கடிதம் அளித்த நிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நாளை (திங்கள் கிழமை) பரிசீலிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.