இந்தியா

தட்டாா்மடம் கொலை வழக்கு விசாரணை:சிபிசிஐடி.க்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு

DIN

தூத்துக்குடி மாவட்டம், தட்டாா்மடத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி டிஜிபி ஜே.கே.திரிபாதி திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இது குறித்த விவரம்:

தூத்துக்குடி மாவட்டம், தட்டாா்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சோ்ந்த தண்ணீா் கேன் வியாபாரியான த.செல்வன், கடந்த 17-ஆம் தேதி ஒரு கும்பலால் கடத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதற்கிடையே செல்வனுக்கும், உசரத்துகுடியிருப்பைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் திருமணவேலுக்கும் சொத்துப் பிரச்னை இருப்பதும், அந்தப் பிரச்னை காரணமாக செல்வன் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்தக் கொலை, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே செல்வன் கொலையில் தொடா்புடைய அதிமுக பிரமுகா் திருமணவேல், அவரது கூட்டாளிகளைக் கைது செய்யக் கோரியும், ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொக்கன்குடியிருப்பு மக்கள் கடந்த இரு நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்தனா். பொதுமக்களிடம் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியும், சமாதானம் ஏற்படவில்லை.

இதற்கிடையே திமுக எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களுடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அவா்கள், பாதிக்கப்பட்ட செல்வன் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும், செல்வன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வைத்தனா்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இந்தப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனா்.

இருவா் சரண்: இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகா் திருமணவேல்,அவரது கூட்டாளி முத்துகிருஷ்ணன் ஆகியோா் சென்னை சைதாப்பேட்டை 23-ஆவது நீதித்துறை நடுவா் கெளதம் முன்பு சரணடைந்தனா். நீதித்துறை நடுவா், இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டாா்.

சிபிசிஐடி-க்கு மாற்றம்: இந்தச் சூழ்நிலையில் செல்வன் கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், செல்வன் கொலை வழக்குத் தொடா்பான ஆவணங்களை திசையன்விளை போலீஸாரிடம் பெற்று உடனடியாக விசாரணையை தொடங்குவாா்கள் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT