பஞ்சாப்: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மறுக்க வேண்டாம்
எந்த சூழலில்லும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர்: எந்த சூழலில்லும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விகிதம் 15.61 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை 3,44,986 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.
இது குறித்து பேசிய பஞ்சாப் பள்ளிக் கல்வித்துறை செய்தித்தொடர்பாளர், அதிக அளவிலான மாணவர் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதியின்மை காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதாக பெற்றோர்களிடமிருந்து புகார் வருவதாக கூறினார்.
இதனால் அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் இடமளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கிஷன் குமார் தெரிவித்துள்ளார். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை பள்ளிகளில் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கு ஏற்ப பணிநேரத்தை காலை மாலை என இரண்டாக பிரித்துக்கொள்வது குறித்தும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் யோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழை கட்டாயம் கேட்கவேண்டிய அவசியமில்லை, அதற்கு பதிலான மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ படிவத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தினார்.