நாட்டிலேயே கரோனா உயிரிழப்புகள் மேற்கு வங்கத்தில் அதிகம்: மத்தியக்குழு தகவல்
கொல்கத்தா-: மேற்கு வங்கத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாட்டிலேயே அதிக அளவாக 12.8 சதவீதம் உள்ளதென அந்த மாநிலத்துக்கு வருகை தந்துள்ள மத்தியக்குழு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அபூர்வ சந்திரா தலைமையிலான மத்தியக்குழு, மேற்கு வங்கத்தில் 2 வார காலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அவர், மேற்கு வங்க தலைமைச் செயலர் ராஜீவா சின்ஹாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் தனிநபர்களை தினசரி கண்காணித்து வருவதாக மாநில அரசு கூறி வந்தாலும், அதுதொடர்பானபுள்ளிவிவரங்கள் மாநில அரசிடம் இல்லை. இந்த புள்ளிவிவரங்களைச் சேகரிக்கவும், மதிப்பீடு செய்யவும் வலுவான அமைப்பு தேவை. அதுமட்டுமின்றி, நோயாளிகளுக்கான சான்றுகள் கூட பராமரிக்கப்படவில்லை. புள்ளி விவரங்களைப் பராமரிப்பதிலும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதன் மூலம் நோய்த்தொற்றின் எண்ணிக்கையை குறைத்து காட்டக் கூடாது.
இதுதொடர்பான அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.