முகப்பு
இந்தியா

ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் அலுவலகம் போகிறீர்களா? இதைக் கவனியுங்கள்

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 40 நாட்களுக்குப் பிறகு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 5 மே, 2020 at 3:34 PM
பகிர்:


கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சுமார் 40 நாட்களுக்குப் பிறகு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை வீட்டில் இருந்து பணியாற்றியவர்கள் முதல், ஊரடங்கால் வேலைக்குப் போக முடியாமல் வீட்டிலேயே முடங்கியவர்கள் பலரும் தற்போது மீண்டும் பணிக்குச் செல்ல ஆரம்பித்திருப்பீர்கள்.

கரோனா தொற்றுப் பரவலில், ஊரடங்கு தொடங்கும் போது நாம் எங்கிருந்தோமோ, அதைவிட மோசமான காலக்கட்டத்தில்தான் தற்போது இருக்கிறோம். ஆனால் இந்த அபாயத்தை எதிர்கொண்டு பணிக்குச் செல்ல வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். எனவே, மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்றி, நம்மையும், நம்முடன் பணியாற்றுவோரையும், நமது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

Advertisement

எனவே, கரோனா தொற்றுப் பரவலுக்கு இடையே மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாறும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்துச் செல்லுங்கள். கூடுதலாக ஒரு முகக்கவசம் மற்றும் கையுறை சீலிடப்பட்ட உரையில் வைத்திருங்கள். 

உங்களது கைப்பையில் இருந்து எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும் கையை 20 நிமிடங்கள் சோப்புப் போட்டுக் கழுவிய பிறகுதான் செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணியும் முன்பு, அதைக் கையாள்வது எப்படி என்பதை நிச்சயம் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

முகக்கவசம் என்பதை அணிவது மட்டுமே முக்கியமல்ல, அது வேறு எந்த வழியிலும் காற்றை உங்கள் மூக்கு மற்றும் வாய்க்குள் செலுத்தாத வகையில் கச்சிதமாக இருக்க வேண்டும்.

அவ்வப்போது சோப்புப் போட்டு கையைக் கழுவ முடியாத இடங்களில் கிருமி நாசினியைக் கொண்டு கையை சுத்தப்படுத்துங்கள்.

எளிமையான ஆடைகளை அணியுங்கள். டை, பிளேசர் போன்ற கூடுதல் விஷயங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

லேசான உடல்நலக் குறைவு என்றாலும் கூட நிச்சயமாக வீட்டில் இருந்து விடுங்கள். 

நீங்கள் சொந்த வாகனத்தில் செல்லும் போது உங்கள் கைபடும் இடங்களை எல்லாம் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

சாலையில் நடந்து செல்லும் போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.  நம்மை நாமே (கண், மூக்கு, வாய்) தொடக் கூடாத சமயத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முகக்கவசத்தை அவ்வப்போது சரி செய்யக் கூடாது. அப்படியே சரி செய்தாலும் உடனடியான கையை சோப்பு போட்டு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

கையுறைகளைப் பயன்படுத்துபவர்கள், கையுறையோடு முகம், கண் போன்றவற்றை தொடுவது கூடாது. பிளாஸ்டிக் கையுறைகளைப் பயன்படுத்துவோர் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திக்  கொள்ளலாம்.

அலுவலக சந்திப்புகள், உணவு இடைவேளை என எப்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். 

அலுவலகம் சென்று வந்ததும், சோப்புப் போட்டு குளிப்பதும், ஆடைகளை யாரும் தொடாமல் துவைத்துப் போடுவது அல்லது துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிடுவது சிறந்தது.

மேலும் பயன்படுத்திய முகக்கவசம் கையுறைகளை சோப்புப் போட்டு துவைத்துக் காயப்போடுவதோ அல்லது ஒரு முறைப் பயன்படுத்தும் முகக்கவசமாக இருந்தால் அதனை கிழித்து மற்றவர்கள் கையில் படாத வகையில் அப்புறப்படுத்துவதும் முக்கியம்.

எந்த இடத்திலும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விஷயங்களில் மட்டும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.