சூரத் - பிரயாக்ராஜ்: கைக்குழந்தையுடன் 1,200 கி.மீ. நடந்து வந்த புலம்பெயர் பெண் தொழிலாளி
ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாமல் தனது கைக்குழந்தை மற்றும் உடைமைகளுடன் 1,200 கி.மீ. நடந்தே சொந்த ஊர் செல்கிறார் புலம்பெயர் பெண் தொழிலாளி.
ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாமல் தனது கைக்குழந்தை மற்றும் உடைமைகளுடன் 1,200 கி.மீ. நடந்தே சொந்த ஊர் செல்கிறார் புலம்பெயர் பெண் தொழிலாளி.
குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நோக்கி இந்தப் பெண் தொழிலாளி தனது கைக் குழந்தையுடன் செல்கிறார். ஒரு கையில் கைக் குழந்தையை சுமந்து கொண்டு மற்றொரு கையில் சூட்கேசுடன் இளம்பெண் ஒருவர் செல்வதை மற்றொரு புலம்பெயர் தொழிலாளி தனது செல்போனில் பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமானோர், இதுபோன்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஏன் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
Advertisement
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தபோது, வேலை, உணவு, பணம் இல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
சூரத் - பிரயாக்ராஜ் இடையேயான 1,200 கி.மீ. தொலைவை நடந்தே கடக்க வேண்டும் என்றால் 10 நாட்கள் ஆகும். இந்தப் பெண் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக 1,200 கி.மீ. தூரத்தை கைக்குழந்தையுடன் நடந்தே கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பெண் தொழிலாளியைப் போல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல், தங்கள் பிரச்னையை அரசுக்குக் கொண்டு செல்லும் வழி தெரியாமல், நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். இன்னமும் சிலர் தங்கள் சொந்த ஊர் நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
பண்டிகைக்கு எல்லாம் சிறப்புப் பேருந்துகள் இயக்கும் மாநில அரசுகள், இதுபோன்ற மிக நெருக்கடியான காலக்கட்டத்தில், எங்கெங்கோ சிக்கியிருக்கும் தங்கள் மாநில மக்களை மறந்தது ஏன் என்றும் வலைத்தளங்களில் கடுமையான விமரிசனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.