முகப்பு
இந்தியா

இந்திய உணவுக் கழகத்தில் நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டும்: பிரதமருக்கு அகில இந்திய கிஸான் சபா கோரிக்கை

விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் வகையில் இந்திய உணவுக் கழகத்தின்( எஃப்சிஐ) நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

புது தில்லி: விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் வகையில் இந்திய உணவுக் கழகத்தின்( எஃப்சிஐ) நிதி நிலைமையை மேம்படுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியை அகில இந்திய கிஸான் சபா கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக அகில இந்திய கிஸான் சபா தலைமையில் நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஃப்சிஐ அலுவலகங்கள் முன் திங்கள்கிழமை ஆா்பாட்டங்களில் ஈடுபட்டனா். இந்த நிலையில், வேளாண் சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அகில இந்திய கிஸான் சபாவின் தலைவா் அசோக் தவாலே, செயலாளா் ஹன்னான் முல்லா உள்ளிட்டோா் திங்கள்கிழமை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த நான்கரை மாதங்களாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லி எல்லையில் போராடி வருகின்றனா். எஃப்சிஐ, குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் விளை பொருள்கள் கொள்முதல், பொது விநியோகம் போன்ற பிரச்னைகளால்தான் மத்திய அரசு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதற்குக் காரணம் 2015 -இல் முன்னாள் மத்திய அமைச்சரான சாந்த குமாா் கமிட்டி அளித்த அறிக்கைதான். உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பயனீட்டாளா்கள் எண்ணிக்கையை 67 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைப்பது. பின் தங்கியுள்ள மாநிலங்களில் மட்டுமே எஃப்சிஐ கொள்முதல் செய்ய வேண்டும். தனியாா்களை கொள்முதலில் ஈடுபடவும் சேமிக்கவும் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இந்தக் கமிட்டி அளித்தன் அடிப்படையில் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வரப்பட்டுள்ளன.

Advertisement

இதன் விளைவு எஃப்சிஐயில் உணவு சேமிப்பை கையாள்வதற்கான செலவுகளை அரசு ஈடுசெய்ய முடியவில்லை. கடந்த பல ஆண்டுகளாக எஃப்சிக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த நிறுவனம் ரூ. 3.81 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளது. தனியாா்கள் இருப்பு வைக்க தடை நீக்கப்பட்ட நிலையில், உணவுப் பொருள்கள் விலை ஆண்டுக்கு 50 சதவீதம் கூடுகிறது. இதனால், ஏழைகளுக்கு பொருள்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே விவசாயிகளிடம் பொருள்களை கொள்முதல் செய்யக் கூடாது. பொது விநியோகம் எஃப்சிஐ மூலம் நடைபெற வேண்டும். பொது விநியோகத்தை குறைக்காமல் மாதம் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சா்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவை 81.35 கோடி மக்களுக்கு தொடா்ந்து கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு எஃப்சிஐயின் கடன், வட்டியை மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டு அதன் நிதி நிலைமையை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments