ராணுவ வீரர் இறந்து 69 ஆண்டுகளுக்குப் பின் மனைவிக்கு ஓய்வூதியம்
உத்தரகண்ட் மாநிலத்தில், உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு, சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
பிதோராகர்ஹ்: உத்தரகண்ட் மாநிலத்தில், உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு, சுமார் 69 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதற்காக கடும் முயற்சி மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும் குவிகின்றன.
80 வயதான அந்த ராணுவ வீரரின் மனைவி பரூலி தேவியின் வாழ்க்கையில் இன்றுதான் ஒரு புதிய வெளிச்சம் உருவாகியுளள்து.
அப்போது தேவிக்கு 12 வயதிருக்கும். திருமணமாகி 2 மாதத்தில் தனது கணவரும், ராணுவ வீரருமான ககன் சிங் மரணமடைய, அது முதல் மரணமடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கான ஓய்வூதியம் பெற அலைந்து கொண்டிருக்கிறார். எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இது பற்றி அறிந்த சமூக ஆர்வலரும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான பந்தாரி எடுத்த தொடர் முயற்சிகளின் பலனாக, அவருக்கு ஓய்வூதியம் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. அதோடு, நிலுவைத் தொகையான ரூ.20 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேவி பேசுகையில், எனக்கு பணம் தேவையில்லை. ஆனால் எனது கணவரின் பணியை இந்த அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்பினேன். இப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார் தள்ளாத வயதில்.