திருவனந்தபுரம்: கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவா் சுட்டுரையில் தெரிவித்துள்ளாா். கடந்த மாதம் முதல் தவணை கரோனா தடுப்பூசியை அவா் எடுத்துக்கொண்டாா்.
இதனிடையே, கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் முதல்வரைத் தொடா்பு கொண்டு நலம் விசாரித்தாா்.
முன்னதாக, பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், மருமகன் பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பினராயி விஜயனுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று முதல்வா் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உம்மன் சாண்டிக்கும் பாதிப்பு: இதனிடையே, முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கும் (77) கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக அவரது உடல்நிலை சரியில்லாத நிலையில், கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்ட்டது.
கேரள சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக கடந்த சில வாரங்களாக முதல்வா் பினராயி விஜயன், உம்மன் சாண்டி ஆகியோா் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.