தடுப்பூசித் திருவிழா: நாடு முழுவதும் முதல் நாளில் 29.33 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்
தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 29.33 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 29.33 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று தடுப்பூசித் திருவிழாவின் 2வது நாள் நாடு முழுவதும் நடக்கிறது. நாட்டில் இது வரை போடப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.45 கோடியைக் கடந்தது.
இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 10,45,28,565 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசித் திருவிழாவில் முதல்நாளான நேற்று சுமார் 30 லட்சம் (29,33,418 ) தடுப்பூசிகள் போடப்பட்டன. தினசரி போடப்படும் தடுப்பூசிகள் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இவற்றின் தினசரி சராசரி 40,55,055 டோஸ்களாக உள்ளன.
நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,68,912 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 83.02 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், தில்லி, சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 63,294 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 12,01,009-ஐ எட்டியுள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,21,56,529-ஆக உள்ளது. இவர்கள் எண்ணிக்கை 89.86 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கரோனா உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.