மாநிலங்கள் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கரோனா தடுப்பூசி செலுத்துவது தீவிரமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களும் கரொனா தடுப்பூசி வழங்கப்பட்டதில் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் சரியான திட்டமிடுதலுடன் செயல்பட்டால் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாது எனத் தெரிவித்தார்.
மேலும் தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும் இந்த மாத இறுதிக்குள் 2 கோடியே 1 லட்சத்து 22 ஆயிரத்து 960 கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.