வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி மீட்ட வனத்துறை
குடியாத்தம் அருகே நள்ளிரவில் 3 பேரை கடித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
குடியாத்தம் அருகே நள்ளிரவில் 3 பேரை கடித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் ஊராட்சிக்குள்பட்டது கலர்பாளையம்
கிராமம். புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறுத்தை ஒன்று
அக்கிராமத்துக்குள் நுழைந்துள்ளது.
அதன் சத்தம் கேட்டு, அருகே உள்ள வீட்டியிலிருந்து பிரேமா(28) வெளியே வந்துள்ளார். அவரை சிறுத்தை தாக்கியுள்ளது.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது கணவர் வேலாயுதம்(42),
மகன் மனோகரன்(20), மகள் மகாலட்சுமி (15) ஆகியோர் வெளியே வந்துள்ளனர்.
அவர்களையும் சிறுத்தை தாக்கி, விட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளது.
சிறுத்தை வீட்டுக்குள் நுழைந்ததும், சமயோசிதமாக செயல்பட்ட பிரேமா
வீட்டின் கதவை சாத்தி வெளியே தாழ்ப்பாள் போட்டார்.
அதற்குள் கிராம மக்கள் அங்கு கூடினர். காயமடைந்த பிரேமா, மனோகரன், மகாலட்சுமி ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் பேர்ணாம்பட்டு வனத்துறையினர், காவல்துறையினர் அங்கு வந்தனர். வீட்டுக்குள் சிக்கியுள்ள சிறுத்தை மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது.
சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஓசூரிலிருந்து கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவர் குழு நிகழ்விடம் வந்தது.
அங்கு ஏராளமான மக்கள் கூடியதால், சத்தம்கேட்டு, சிறுத்தை அறையின் உள்புறம் பதுங்கியுள்ளது. அறையிலிருந்து வெளியே வந்தால், சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவர் குழு தயார் நிலையில் இருந்தனர்.
தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் பலனாக சிறுத்தைக்கு மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை பத்திரமாக காட்டிற்கு கொண்டுசென்றுவிட்டனர்.