பாதுகாப்புத் துறையிலிருந்து உ.பி.க்கு ஆக்ஸிஜன்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வசதியாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று 150 பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உத்தரப் பிரதேச அரசுக்கு டிஆர்டிஓ வழங்கியுள்ளது. லக்னெளவிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உத்தரப் பிரதேச அரசுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வழங்கவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.