கரோனா தடுப்பூசி ஒரே விலையில் வழங்கப்பட வேண்டும்: சத்தீஸ்கர் முதல்வர்
மத்திய அரசுக்கு கரோனா தடுப்பூசி என்ன விலையில் கொடுக்கப்படுகிறதோ அதே விலையில் மாநில அரசுகளுக்கும் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு கரோனா தடுப்பூசி என்ன விலையில் கொடுக்கப்படுகிறதோ அதே விலையில் மாநில அரசுகளுக்கும் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்தார்.
கரோனா பரவல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதில் கலந்துகொண்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கரோனா தடுப்பூசிகளின் விலை மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்கு என்ன விலைக்கு அளிக்கப்படுகிறதோ அதே விலைக்கு மாநில அரசுகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் மாநிலங்கள், மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர் மே 1 முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான செயல் திட்டத்தை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சுகாதார அதிகாரிகள், பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.