யவத்மால்: மகாராஷ்டிர மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் காரணமாக, மதுபானம் கிடைக்காததால், கைகளைக் கழுவப் பயன்படுத்தும் கிருமிநாசினியைக் குடித்த மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மதுபானம் கிடைக்காமல், பலரும் கிருமிநாசினிகளைக் குடித்து உயிரிழந்த நிலையில், கரோனா இரண்டாவது அலையிலும் அதே நீடிக்கிறது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மூன்று பேர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று பேருமே உயிரிழந்தனர்.
அவர்களது மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், மதுபானம் கிடைக்காததால், கைக் கழுவும் கிருமிநாசினியை மூவரும் குடித்ததாகவும், அதனால் அவர்கள் மரணமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரோனா பேரலை கடுமையாக தாக்கி வரும் நிலையில் நாட்டில் பாதிப்பு சொல்லொணா வகையில் உள்ளது. இதற்கிடையே, ஆக்ஸிஜன், படுக்கை வசதி, வென்டிலேட்டர் தட்டுப்பாடுகளைப் போக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில், தங்களது இன்னுயிரை கிருமிநாசினிக்கு இழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.