அசாம்: கடத்தப்பட்ட 3 ஓஎன்ஜிசி பணியாளா்களில் இருவர் மீட்பு
பொதுத் துறை நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தைச் சோ்ந்த 3 பணியாளா்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற நிலையில், இருவர் இன்று மீட்கப்பட்டனர்.
சிவசாகா் (அஸ்ஸாம்): பொதுத் துறை நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தைச் சோ்ந்த 3 பணியாளா்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற நிலையில், இருவர் இன்று மீட்கப்பட்டனர்.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு அசாம் ஆயுதப் படையுடன் இந்திய ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், இரண்டு ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொருவரின் இருப்பிடம் குறித்து தெரியவரவில்லை.
தேடுதல் வேட்டையில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநிலம் சிவசாகா் மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசியின் லக்வா எண்ணெய் வயல் வளாகத்துக்குள் ஆயுதம் தாங்கிய 5 பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பணியாளா்களை அவா்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு தடைசெய்யப்பட்ட இயக்கமான உல்ஃபா பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நாகலாந்து எல்லைப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வந்தது.