மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதும், தேரதல் முடிவுக்குப் பின்னரும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
கரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக நேற்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மே 2-ல் வாக்கு எண்ணும் போது முன்னிலை விவரங்கள் வெளியாகும். முன்னிலை விவரங்கள் வெளியிடும் போதும், வெற்றிபெற்றவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் போதும், அதனைக் கொண்டாட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. அன்றைய தினம் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட தடை விதித்துள்ள தேர்தல் ஆணையம், தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.