கேரளத்தில் கரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு
கேரளத்தில் தனியார் மருத்துவமனை, தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 1,700 லிருந்து ரூ. 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் தனியார் மருத்துவமனை, தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 1,700 லிருந்து ரூ. 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேரளத்தில் ஜனவரி 1 ஆம் தேதி கரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.2,100 லிருந்து ரூ .1,500 ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால், தனியார் ஆய்வகங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை அடுத்து, நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப கட்டணம் ரூ. 1,700 ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் அங்கீகரித்த கருவிகள் சந்தையில் மலிவானவை என்று கண்டறியப்பட்டதை அடுத்து விலை ரூ. 500 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார். மேலும் இந்த கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதேநேரத்தில் அரசு ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை இலவசமாக நடத்தப்படுகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் முறையே ரூ.1,200 மற்றும் ரூ.800 என்ற அளவில் பரிசோதனைக் கட்டணங்கள் உள்ளன.
கரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.