முகப்பு
இந்தியா

வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோ: கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், கடந்த ஒரு சில நாள்களாக கனமழை கொட்டி வருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய கர்ப்பிணிக்கு, ஆட்டோவிலேயே பிரசவம் பார்க்க பெண் காவலர்கள் உதவியுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோ: கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்
பகிர்:


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், கடந்த ஒரு சில நாள்களாக கனமழை கொட்டி வருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய கர்ப்பிணிக்கு, ஆட்டோவிலேயே பிரசவம் பார்க்க பெண் காவலர்கள் உதவியுள்ளனர்.

நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி எடுத்ததும், ஆட்டோ மூலம் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டிருந்ததால், மேற்கொண்டு ஆட்டோ நகர முடியாமல் தத்தளித்தது. இதனை அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண் காவலர்கள் பார்த்ததும் நிலைமையை புரிந்து கொண்டனர்.

சாலை வழியாக கர்ப்பிணியை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்த காவல்துறை துணை ஆய்வாளர் அருந்ததி ரஜாவத், தலைமைக் காவலர் இதிஸ்ரீ ரத்தோர், உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியிலிருந்து செவிலியரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். 

ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு குழந்தைப் பேறு நடக்க காவலர்கள், செவிலியருக்கு உதவினர். இதையடுத்து, அந்த மூன்று சக்கரங்களைக் கொண்ட ஆட்டோவில் கர்ப்பிணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பிறகு இருவரும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு, பெண் காவலர்கள் இணைந்து பிரசவம் பார்த்து, தாய் - சேய் உயிரைக் காப்பாற்றியது அப்பகுதி மக்களால் பெரும் பாராட்டுக்குள்ளானது.
 

முழு கட்டுரையைப் படிக்க →